Friday, 6 January 2012

2012 புத்தாண்டு சபதங்கள்.....

 

 

 

 

 

 

 

 

விடுமுறையாயினும்
விடியல் முன் கண் விழிப்பேன்.
மார்கழி மாதத்திலும் கூட!

பல் துலக்கியே பிறகே
காபி அருந்துவேன்.
ஞாயற்று கிழமையும் கூட!

குளித்தவுடன் குலதெய்வ
வழிபாடு செய்வேன்.
அன்று ஏதொரு பிரச்சனைகள்
இல்லை என்றாலும் கூட!

கஷ்டப்பட்டாவது காலை உணவை
கடவாயில் திணிப்பேன்.
அது உப்புசப்பின்றி இருந்தாலும் கூட!

உயிரைக் கொடுத்தாவது
உடற்ப் பயிற்சி மையம் செல்வேன்.
உயிர் நண்பன் வரவில்லை என்றாலும் கூட!

அலுவலகம் செல்லும் முன்
ஆசையாய் மனைவிக்கு முத்தம் தருவேன்.
அவள் முகம் அஷ்டகோணத்தில்
இருந்தாலும் கூட!

மெனக் கெட்டாவது அலுவலகம்
செல்வேன், குறித்த நேரத்தில்.
மேனேஜர் விடுப்பில் உள்ள போதிலும் கூட!

கோழிக்கு பதில் பச்சை
காய் கறிகள் உண்பேன்.
தலையில் கொம்பு முளைத்தாலும் கூட!

புகைப்பதற்கு புல்ஸ்டாப்
வைக்கவில்லை என்றாலும்,
ஆறிலிருந்து நான்காக குறைப்பேன்.
அன்று நாய் படாத வேலை பார்த்தாலும் கூட!

குடியை மாதமொரு
முறையாய் குறைப்பேன்.
மதிகெட்ட நண்பர்கள்
மதிக்கவில்லை என்றாலும் கூட!

வார வாரம் தண்ணி
கொண்டு வண்டி துடைப்பேன்.
வண்டி வொர்க் ஷாப் சென்று
வந்திருந்தாலும் கூட!

தொலைக்காட்சியுடன் கொண்ட
தொடர்பை துண்டிப்பேன்.
இன்டர்நெட் பழுதாய் இருந்தாலும் கூட!

கோபத்தை அடக்கிக் கொள்வேன்.
மனைவி சிரிக்கும் போதும் கூட.

மாமியார் பிறந்த நாளை
மறக்க மாட்டேன்.
அன்று சரக்கோடு சம்சாரித்து இருந்தாலும் கூட!

முகப் புத்தகத்தில் முங்கி முங்கி
முத்தெடுக்க மாட்டேன்.
முல்லை பெரியாறு விவகாரம் முடிவுக்கு வந்தாலும் கூட!

அறிவை பெருக்க தேடித்
தேடி படிப்பேன்.
சுத்தமாக புரியவில்லை என்றாலும் கூட!

தினந்தோறும் நடந்ததை
டைரியில் பதிவு செய்வேன்.
அன்று முழுவதும் படுத்தே இருந்தாலும் கூட!

முடிந்தவரை உண்மையே பேசுவேன்.
அலுவலகத்துக்கு லீவு
கேட்கும் போது கூட!

ஞாபகம் வரும்போதெல்லாம்
மனைவி இடம் அழகாய் இருகிறாய் என்பேன்.
பயமாய் இருந்தாலும் கூட!

மிக முக்கியமாக,
இந்த ஆண்டிலாவது எழுதிய
இந்த காகிதத்தை தொலைக்காமல்
பார்த்துக்கொள்வேன்.
கடைபிடிக்கவில்லை என்றாலும் கூட!!!

புத்தாண்டு வாழ்த்துகள்.

No comments:

Post a Comment